×

நிலத்தில் மாடுகளை மேயவிட்டு பயிர்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த காக்கவாக்கம் காலனியை சேர்ந்த விவசாயிகள் முனுசாமி, ஆறுமுகம், நந்தன், அல்லிமுத்து, காளிதாஸ் மற்றும் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; வறுமை கோட்டுக்கு கீழ் கூலி தொழில் செய்துவரும் நாங்கள் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு பெருவெள்ளம் ஏற்பட்டபோது 3 இடங்களில் ஏரிக்கரை அறுபட்டு ஏரியின் கீழ் அடிவாரத்தில் பள்ளங்கள் தோன்றி முட்புதர்கள் முளைத்து பயனற்ற இடமாக இருந்தது.

அந்த இடத்தை காக்கவாக்கம் காலனி பகுதியை சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் அங்கிருந்த பள்ளம் மற்றும் முட்புதர்களை அகற்றி சமன் செய்து சுமார் 40 ஆண்டு காலமாக பயிர் செய்து ஜீவனம் நடத்தி வருகிறோம். தற்போது காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலர் நாங்கள் பயிரிட்ட பயிர்களில் மாட்டைவிட்டு மேயவிட்டு சேதப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து கேட்டால் தகராறு செய்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரமாக உள்ள அரசு நிலத்தில் பயிர் செய்து பிழைப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post நிலத்தில் மாடுகளை மேயவிட்டு பயிர்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Collector ,Tiruvallur ,Munusamy ,Arumugam ,Nandan ,Allimuthu ,Kalidas ,Kakkavakkam Colony ,Uthukottai ,
× RELATED ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய...